நெத்திச்சூடி
மாட்டு வண்டி பூட்டிக்கிட்டு
புல்லு மட்ட ஏத்திக்கிட்டு,
காட்டு வழி போகயில – அடி
அத்த புள்ள ஓன் நெனப்ப
பத்திரமா வச்சிருக்கேன்.
காத்து மெல்ல வீசிடுச்சி
காதில் எதோ பேசிடுச்சி
ஆத்து வெள்ளம் போல என்,
ஆசையெல்லாம் ஓடுதடி.
அந்தியில முத்து மொகம்
வானத்தில வந்துடுச்சி
முல்லப்பூவு வாசத்துல
என் மனசும் கலந்துடுச்சி
காள மணி சத்தத்தோட
உன் கொலுசும் பேசிடுச்சி
சந்தையில நெத்திச்சூடி
அழகழகா மின்னுதடி
காசு பணம் போதலயே
நெத்திச்சூடி வாங்கலயே
மனசெல்லாம் நெத்திச்சூடி
உன் நெத்தியிலே மின்னுதடி
வானமிப்போ இருட்டிடுச்சி
நட்ச்சத்திரம் தெரிஞ்சிடுச்சி
வந்த பாத மறந்திடுச்சி
வாடக் காத்தும் அடிச்சிடுச்சி
ஒத்தையில ஓன் நெனப்பு
வழியெல்லாம் பூத்திடுச்சி
நெத்திச்சூடி வாங்கலையே
மனசெல்லாம் வாடிடுச்சி
ஊரு எல்லை வந்திடுச்சி
கொண்டச் சேவ கூவிடுச்சி
ஆத்தில தண்ணிஎடுக்க
நீ வரும் நேரமாச்சே
மாட்டு வால தட்டிவிட்டு
சீக்கிரமா ஓடச் சொன்னேன்
ஆயிரங்கால் வைக்கயிலே
ஆத்தங்கர வந்திடுச்சி
மாடு ரெண்டும் மேயவிட்டு
ஆசையோட ஓடிவந்தேன்
கண்ணு ரெண்டும் ஏவிவிட்டு
கால் வலிக்க காத்திருந்தேன்
நேரம் எங்கோ போயிடுச்சி
பொழுதும் இப்போ விடிஞ்சிடுச்சி
அத்தபுள்ள காணலேன்னு
கண்ணு ரெண்டும் கலங்கிடுச்சி
நெத்திச்சூடி வாங்கலேன்னு
முத்து நிலா மூழ்கிடுச்சு…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக