ஞாயிறு, 27 ஜனவரி, 2013

நீ எங்கும் உண்டோ?













இறந்தவரெல்லாம்
உன்னிடமெனில்
உன்னிடமிருந்து
யார் வந்து சொன்னது
நீ இருக்கிறாய் என்று
-
ஆழி நீ எனில்
பூமி நீ எனில்
காற்று நீ எனில்
நெருப்பு நீ எனில்
வானம் நீ எனில்
ஏற்றுக்கொள்கிறேன்
உன் சீற்றங்களை
-
ஆக்கும், அழிக்கும்
உரிமைகள் உனதெனில்
நீ ஆக்கிய உயிர்கள்
அழிக்கும் உரிமையை
பெற்றதேன்.
-
காப்பது நீயெனில்
காவலர்கள் ஏன் இங்கு
-
நீ இல்லை
என்று சீறும் நான்
உன்னை
நீ காட்டிக்கொள்ள
நேரம் தருகிறேன்
முடிந்தால்
முன் நில்லும்

உனக்கென










உனக்கென தினம் தினம்
உதிக்கிறேன் அந்தி வெண்ணிலவே
-
தினம்
இரவில் விழித்து; நிலவை குழைத்து
வரைகிறேன் உந்தன் ஓவியம்
கனவை சேர்த்து; கவிதை கோர்த்து
வடிக்கிறேன் இந்த காவியம்
-
நதியில் விழுந்து; மணலில் கரைந்து
காண வந்தேன் உன்னைத் தேடி வந்தேன்
மழையில் நனைந்து; கடலில் கலந்து
பாதம் கண்டேன் உன்னுள் வாதம் கொண்டேன்
தினம் இரவில் விழித்து…
-
-
மழையானவள்;
அலையானவள்
என்று என்னையிவள் சேர்ந்திழுப்பாளோ
-
கனவாகிறாள்;
விதையாகிறாள்
என்று…………எனக்கிவள் உறவும் ஆவாள்
-
கோதையே என் சீதையே
எனை தெரிந்துகொள் – கொஞ்சம்
புரிந்துகொள்
கவிதையே என் கவிதையே
எனை எடுத்து சொல் – மெல்ல
தொடுத்து செல்…
-
காற்றாகவே நுழைந்தவள்
ஆற்றாகவே நிறைகிறாள்
வேராகவே புதைந்தவள்
பூவுமாகி மணக்கிறாள்
-
தினம்
இரவில் விழித்து; நிலவை குழைத்து
வரைகிறேன் உந்தன் ஓவியம்
தினம்
கனவை சேர்த்து; கவிதை கோர்த்து
வடிக்கிறேன் இந்த காவியம்

வாழ்கையின் வாழ்க்கை












கெழக்கு அது விடிஞ்சும் என்
பொழப்பு ஏனின்னும் விடியல
நெலவு அது தொலஞ்சும் என்
கனவு ஏனின்னும் தொலையல
-
மேகம் அது கலஞ்சும் என்
சோகம் ஏனின்னும் கலையல
நேரம் அது கொறஞ்சும் என்
பாரம் ஏனின்னும் கொறயல
-
கடனா கெடக்குது ஒலகம்
விடுனா புடிக்குது கலகம்
பொறுப்பா துடிக்குது இதயம்
வெறுப்பா இருக்குது நெதமும்
-
என்னதான் இல்ல
கைமீறிப் போகுதே எல்ல
அன்புதான் தொல்ல
கண்மீறித் தேடுதே மெல்ல
-
உசுரக் கொடுத்து ஒழச்சா
வாழுவதெப்போ
வயிறு காயப் படுத்தா
தூங்குவதெப்போ
-
மனச மறச்சு ஒளிச்சா
சேருவதெப்போ
பழச நெனச்சு கெடந்தா
மீளுவதெப்போ
-
கெழக்கு அது விடிஞ்சும் என்
பொழப்பு ஏனின்னும் விடியல
நெலவு அது தொலஞ்சும் என்
கனவு ஏனின்னும் தொலையல