சனி, 11 ஆகஸ்ட், 2012

குப்பையில் தெய்வம்



கருவிலேயே கலைந்திருக்கலாம் – அல்லது

பிறந்ததும் இறந்திருக்கலாம்.

வாழ்வதற்க்கு உண்டான அத்தனை

சாத்தியக்கூறுகளும்

என்னுள் இருந்ததென்னவோ!

பிரியும் முன்

சிறிதாய் உயிரிட்டுப் போயிருந்தாள்.

உயிரிட்டுப் போனவள்;

ஒருவாய் நீரிட்டுப் போயிருக்கலாம்.

திரையிட்டு போனவள்;

அழகாய் பெயரிட்டுப் போயிருக்கலாம்.

நிலவும் இல்லாத

இந்தப் பின்இரவில்

என்ன செய்ய முடியும் என்னால்

அழத்தான் தெரியும்

வயிற்றை நிரப்பும் வரை.

யார் வந்து எடுப்பாரோ?

யார் வந்து கொடுப்பாரோ?

தெரு நாய்கள் கூட குட்டிகளுடன்

அமைதியாய் உறங்குகிறது.

கடித்திடும் எறும்புகளை

தடுத்திடவா முடியும்.

ஆற்றில் வீசியிருந்தால்

நொடியில் இறந்திருப்பேனே – இப்படி

சேற்றில் வீசினாயே!

என்னால்

அழத்தான் முடியும்

வயிற்றை நிரப்பும் வரை – அல்லது

என் மூச்சை நிறுத்தும் வரை……



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக