சனி, 4 ஆகஸ்ட், 2012

பிரார்த்தனை செய்வோம்


நெல்லெல்லாம் சருகான
திசையெல்லாம் அனல் காற்று;
ஊற்றெல்லாம் புதரான
வழியெல்லாம் சுடும் காடு;
வற்றிப்போன கரையெல்லாம்
வெயில் வதக்கிய மீன் குஞ்சுகள்;
கண்ணுக்கெட்டிய தொலைவு வரை
கருப்பு வெள்ளையாய் எங்கும்
கூனி கிடக்கிறது பச்சை வயல்கள்;
பூத்துக்குலுங்கிய மரக்கிளைகள்
எலும்புக்கூடாய் நிற்க்கிறது;
நிழல்கள் இல்லாத பாதையில்
கருகிக் கிடக்கிறது இலைகள்;
ஊரின்றி அமையாது உலகு
நீரின்றி அடங்காது உசுரு
நிலமெல்லாம் நீ வேண்டும்!!!
வற்றாத ஊற்றாக
கிணறெல்லாம் நீ வேண்டும்.
எட்டாத கனியாக;
சொட்டாத தேனாக;
விண்ணோடு நிலைக்காமல்,
மண்ணோடு மழையாக நீ வேண்டும்.
வெயில் பொசுக்கிடும்
உழவனின் உடலின்
வேர்வையில் கலந்து
ஓவியம் தீட்டிட வேண்டும் நீ….
சிட்டுக் குருவிக்கும், சுட்டி அணிலுக்கும்,
தொட்டி மீனுக்கும், பட்டி ஆட்டுக்கும்
வற்றாத தேனாக வேண்டும் நீ….
மழையே மண்ணெல்லாம்
நீ வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக